Nov 1, 2011

சென்னையில் ஒரு மழைக்காலம் - ஆபாயில் (அப்படியே சாப்பிடுங்க)



சென்னை பெங்களூருவாக மாறி விட்டது.

இங்கிருக்கிற பொண்ணுங்க எல்லாம் ரொம்ப அழகாவும், மாடர்ன் ஆகவும் மாறிவிட்டார்கள் என்று அர்த்தம் இல்லை.

அதிகமாய் மழை பெய்வதால், பகலிலேயே குளிர்கிறது.

வெய்யில் காலத்திலேயே சாயங்காலம் வெளியே சென்று சூடாய் நாலு பஜ்ஜியை உள்ளே தள்ளி, தண்ணியை குடிக்கும் நம்ம ஆட்களுக்கு இப்போது சொல்லவே வேண்டாம்.

இந்த குளிரில் ஆபிஸ் போகவே தோன்றவில்லை. அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.

பாதை எல்லாம் பள்ளமாக மாறி பருவ பெண்ணை பார்க்கும் வயசு பையனை போல அசிங்கமாக பல்லிளிக்கிறது. மழை காலம் முடிந்த பிறகு அம்மாவிடம் மனு போட்டு, இன்னொரு உள்ளாட்சி தேர்தல் நடத்த சொல்ல வேண்டும்.

Shoe போட்டு கொண்டு ஆபிஸ் செல்பவர்களின் நிலைமை படு திண்டாட்டம். சில இடங்களில் முட்டியளவு தண்ணீர் நிற்கிறது. பாவாடை அணிந்திருந்தால் எளிதாய் தூக்கி பிடித்துக்கொண்டு கடந்து விடலாம்.

இந்த மாதிரி நேரங்களில், நமது அரசு கிரியேடிவ் ஆன போட்டிகள் நிறைய வைத்து பரிசு கொடுத்து மக்களை குஷி படுத்தலாம்.

  • ஒரு பள்ளத்தில் கூட விடாமல் வண்டியை ஓட்டுவது.
  • ரோட்டில் உள்ள பள்ளத்தை தாண்டும் Long Jump. 
  • தேங்கி உள்ள நீரில் நீச்சல் போட்டி மற்றும் படகு போட்டி.

இன்னும் என்ன மாதிரி போட்டி வைக்கலாம்? என நீங்களும் கமெண்டில் சொல்லலாம்.

நீச்சல் தெரிந்தவர்கள் மட்டுமே சென்னையில் வாழ முடியும்.

ஆனால் இந்த கொட்டும் மழையில், சிட்டியில் சில பேர் மட்டுமே சந்தோசமாய்  வண்டியோட்டி செல்ல முடியும்.

அவர்கள் ஆட்டோகாரர்கள்.



தமிழ் சினிமாவில் பாட்டே இல்லாமலும், ஒரே ஒரு பாட்டுடனும் நிறைய படங்கள் வந்து விட்டது.

தமிழ் சினிமாவை முன்னுக்கு கொண்டு வர தம் கட்டி முக்கி கொண்டிருக்கும் இயக்குனர்களாக அறியப் படும் செல்வராகவன், முருகதாஸ் போன்றோர் ஏன் இன்னும் தயங்குகிறார்கள்?

இன்னும் எத்தனை நாளுக்கு தான் கூடுவாஞ்சேரியில் கனவு கண்டு நியூயார்க்கில் போய் டூயட் பாடுவது? பின்னால் வெள்ளையர்களை சேர்த்து கொண்டு ஆடும் பாலிவுட் காய்ச்சல் இன்னும் "விடாது கருப்பாய்" கோலிவுட்டை தொடர்கிறது.

சமீப காலங்களில் திரையரங்கில் பாடல் வரும் போதெல்லாம், "ஐயோ பாட்டு போட்றாதிங்க" என்று மக்கள் அலறும் சத்தம் அதிகரித்திருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால் நம் இயக்குனர்கள் இதை கேட்காமல் ஜடமாக இருப்பது ஆச்சர்யம் இல்லை. பாட்டு ஷூட் செய்வதற்கு  பின்னால் எக்கச்சக்க சௌகரியங்கள் இருக்கின்றன. இதை விட்டு கொடுத்தால், அடுத்தவன் பைசாவில் ஆம்லெட் சாப்பிட முடியாது அல்லவா!

படம் முடிந்தவுடன் பாடல்களை தனியாய் போடலாம். இஷ்டம் உள்ளவர்கள் பார்க்கட்டும். மற்றவர்கள் தம் அடிக்கட்டும்.



டெக்னாலஜி வளர்ந்த நாடுகள் எடுக்கும் Sci-Fi படங்களை மட்டுமே நம்மால் நம்ப முடிகிறது. அமெரிக்காவில் 4G, Automatic driving, வீடுகளில் உள்ள செக்யூரிட்டி கன்ட்ரோல் என்று பல விதங்களில் அவர்கள் நமக்கு ஒரு decade முன்னதாக போய் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் இன்னும் 2G ஊழலே முடியவில்லை.

நம் நாட்டில் தற்போது என்ன காலாச்சாரம், டெக்னாலஜி உள்ளது என்று அறிந்து அதை வைத்து படம் எடுத்தால் தான் ஒரிஜினலாக இருக்கும்.

நம்மூரில் முக்கால்வாசி ட்ராபிக் சிக்னல்கள் Manual ஆகத்தான் Operate செய்யப் படுகின்றன. அப்படி இருக்கையில் நம் நாட்டில் உள்ள ட்ராபிக் சிக்னல்களை ஒரு லேப்டாப் வைத்துக் கொண்டு ஹாக் (Hack) செய்வது போன்று படத்தில் காண்பிப்பதை பார்க்கையில் கவிழ்ந்து படுத்துக் கொண்டு தான் சிரிக்க தோன்றுகிறது. திரையரங்கில் பார்க்கையில் அப்படி செய்ய முடியாது என்பதும் வருத்தம்.



நம் இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள். சயின்ஸ் வளர்ந்த பிறகு Sci-Fi  படங்களை எடுங்கள். அதுவரை உங்கள் அறிவு திறமைகளை எங்கேயாவது பரணில் ஒளித்து வையுங்கள். அல்லது மதுரையை சுற்றியோ அல்லது தென்காசியை சுற்றியோ பனைமரத்தடியில் கேமராவை தூக்கி சென்று படம் எடுத்து கொண்டிருங்கள்.

தான் நினைத்த கதைக்கு சரியான டெக்னாலஜி இல்லை என்ற காரணத்தினால் பத்து வருடத்திற்கு மேலாக காத்திருந்தாரே அவதார் இயக்குனர் ஜேம்ஸ் காமருன், அவர் என்ன முட்டாளா?

சும்மா மொக்கையாக எதோ எழுதி, ஹிட்ஸ் வரவேண்டும் என்ற காரணத்திற்க்காக, அந்த பதிவை உடனடியாக வெளியிடும் என்னை போலவே, நம் இயக்குனர்களும் இருக்கிறார்கள்.




எங்கள் வீட்டில் பெண் தேடும் படலம் மும்முரமாய் போய் கொண்டிருக்கிறது என்றெல்லாம் பொய் சொல்ல மாட்டேன். அஷ்டம சனி அந்த சனி இந்த சனி என்று என் அப்பா கோவில் கோவிலாய் என்னை அலைகழிக்கும் போதெல்லாம் எனக்கு கடவுளின் மேல் வெறுப்பு அதிகரிக்கிறது.

போன வாரம் என் அப்பா எனக்கு கால் செய்து "ஒரு பெண் ஜாதகம் வந்திருக்கு. பொண்ணு எஸ்.ஐ ஆக வேலை பார்க்குது. ஓகே வா?" அப்படின்னு கேட்டார்.

எனக்கு "ராமன் தேடிய சீதை" படத்தோட கிளைமாக்ஸ் ஞாபகம் வந்தது.

"வேண்டாம்ப்பா அதெல்லாம் நமக்கு ஒத்து வராது" என்று சொல்லிவிட்டேன்.

இப்போது தமிழ் நாட்டில் ஏகப்பட்ட ராமன்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். சீதையை கண்டுபிடிப்பதற்குள் அவர்களுக்கு நடிகர் சேரனின் வயசு ஆகிவிடுகிறது. எங்கள் ரூமில் நாங்கள் மூன்று ராமன்கள்.

என்னுடைய சீதை எங்கே இருக்கிறாளோ? தெர்ல.



இங்கிருந்து Onsite செல்லும் நம் IT யில் பணி புரியும் ஆண்கள் சில பேர் அங்கு சென்றதும் பெண்களாகி விடுகிறார்கள். கிட்டதட்ட Onsite என்பது அவர்களுக்கு புதுசாக கல்யாணம் ஆகி செல்லும் மாமியார் வீடு போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அது அவர்களுக்கு சந்தோசத்தையும் பயத்தையும் ஒரு சேர ஏற்படுத்துகிறது.

அவர்கள் பொதுவாய் செய்யும் வேலைகள் சில, 
  • சாப்பாடு செய்வது, பாத்திரம் கழுவுவது
  • அழுகை சீரியல், தமிழ் மொக்கை படங்கள் ஒன்று விடாமல் பார்ப்பது.
  • இந்தியாவில் இருக்கும் நண்பர்களிடம் கால் செய்து, கதற கதற மொக்கை போடுவது
  • அடிக்கடி குடும்பத்தினருக்கு கால் செய்து, குசலம் விசாரிப்பது.

வாசல் தெளித்து கோலம் மட்டும் போட முடியாது அவர்களால்.



1 comment:

அமுதா கிருஷ்ணா said...

ஆன்சைட் ஆண்கள்..அசத்தல்..சீக்கிரம் சீதா கிடைக்க ஆசிர்வாதங்கள்.