Sep 28, 2008

தனிமையின் ராஜாங்கம்




இரவின் பிள்ளை நான்
நிலவைத் தேடுகிறேன்

அழகின் பஞ்சத்தில் என்னை
கடவுள் படைத்தான்
கள்ளிப் பூக்களாய்
தனிமை என் இடம்தான்

நீரின் அருகாமையா?
சற்றே ஒதுங்குகிறேன்
என் உருவம் தெரிவதனால்

கண்ணாடியை வெறுக்கிறேன்
என்னை அழகாய்க் காட்டுவதில்லை

இயற்கையை வைத்துக்
கவிதைகள் எழுதுகிறேன்
செயற்கைத்தனமாய் காதல் கவிதையும்

உண்ட அவசரத்தில்
உறங்கச் செல்கிறேன்
கனவிலாவது காதல் கிட்டுமென்று

நிழற்படம் எடுக்கையில்
சரி பார்த்தே நிற்கிறேன்
அழகாய் இருந்ததாய்
இதுவரை சரித்திரம் இல்லை

காதல் கைகூடாது
ராசிபலன்களின்
வாழ்நிலை அறிக்கைகள்

தனிமை என் ராஜாங்கம்
விளையாடுகிறேன் சதுரங்கம்
ராணி இல்லாமல்.




Sep 11, 2008

அடக்கமில்லை என் ஐம்புலன்களுக்கு


 
உன் பார்வைக்கு
அலையும் என் கண்கள்

உன் குரல் வேண்டி
கேளாவிரதம் இருக்கும் என் செவிகள்

உன் வாசத்திற்கு
வசமாகும் என் நாசி

உன் முத்தத்தை
வாய் விட்டுக் கேட்கும் என் இதழ்

உன் தோள் உரசி
நடக்கத் துடிக்கும் என் தோல்

என் செய்வேன்?

என் ஐம்புலன்களுக்கு அடக்கமில்லை.




யாம் உணர்ந்தேன் பராபரமே!




மின்னல் வந்தபின் தான்
இடி விழும் என்று அறிவேன்.

அதை உணர்ந்தேன் 
இன்று அவள் பார்த்த 
மின்னல் பார்வையில்
என் இதயத்தில் இடி விழுந்தபோது.




Sep 2, 2008

காதலி சொல் மிக்க மந்திரம் இல்லை



அம்மா அப்பா
அக்கா தங்கை
என யார் திட்டியும்,
என் நகக்கண் சிவந்தும்,
நகம் கடித்தலை விடாத என் பற்கள்
நீ சொல்ல நிறுத்தி விட்டது
தன்னை தானே கடித்(ந்)துக் கொண்டு.