Apr 27, 2010

நீ வராத நாட்களில்...

                                                                                         

வகுப்பறையில் நுழைந்ததுமே
தானாக உன் இருக்கையிலே
விழும் என் கண்கள்
நீ இல்லாத நிலை உணர
வகுப்பறை கடிகாரமும்
சில நொடிகள் நின்று போகின்றன
என் இதய துடிப்போடு.

கடைசி மணி அடிக்கும் வரை
கண் திறந்தே வேண்டுகிறேன்
வகுப்பறையில் மாட்டியிருக்கும்
காலண்டர் தெய்வங்களை.

வருகை பதிவேட்டில்
கடைசி பெயர் அழைக்கும் வரை
வாசலையே வெறிக்கின்றேன்
என் நாள் கடத்தும்
உன் பாதங்களுக்காய்.

இன்னும் நம்பிக்கை தளராமல்
"நீ வரும் பேருந்து தாமதம்",
"உன் நண்பனுக்கு உடல் நலம் சரி இல்லை
மருத்துவமனைக்கு கூட சென்றிருக்கிறாய்"
என்றெல்லாம்
காரணங்களை தேட சொல்லி
என் கற்பனையை
விரட்டுகிறேன்.

இதெல்லாம் பொய்த்து விட்டதாய்
உணர்ந்த
சில நிமிட நேரங்களில்
இருட்ட தொடங்கிவிடுகின்றன
என் பொழுதுகள்.

காத்திருக்கிறேன் உன் விழி சேர்க்கும்
அடுத்த விடியலுக்காக!




3 comments:

Siva said...

nice one :)

மதுரை சரவணன் said...

//காத்திருக்கிறேன் உன் விழி சேர்க்கும்
அடுத்த விடியலுக்காக!//
கவிதை அருமை. வாழ்த்துக்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

இதுவும் காதல் வழிய வழிய எழுதியிருக்கீங்க...