Jan 12, 2011

புத்தாண்டு, புத்தக கண்காட்சி - ஆபாயில் (அப்புடியே சாப்பிடுங்க)

வெங்காய விலை ஏறினாலும், தக்காளி விலை ஏறினாலும், எதற்கும் கவலை படாமல் அதிரடியாக அடுத்த ஆண்டிற்குள் அடி எடுத்து வைக்கும் உங்கள் ஆபாயிலின் கொஞ்சம் பெப்பர் தூக்கலான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.



புத்தாண்டு இரவு அன்று அரசு மதுபான கடையில் அரசுக்கு சிறிது வருமானம் கொடுத்துவிட்டு நண்பர்களோடு பெசன்ட் நகர் கடற்கரை சென்று இருந்தேன்.  அடையாறு சிக்னலில் இருந்தே மக்கள் கூட்டம் கூட்டமாய் ஏதோ வன்முறைக்கு செல்வது போல பயங்கரமாக கூச்சலிட்டு கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். பீச் ரோட்டிற்கு சென்றால் டிராபிக் ஏற்பட்டு விடும் என்ற காரணத்தினால் ஒரு கிலோமீட்டர் முன்னே பைக்கை நிறுத்தி விட்டு நடந்து சென்றோம். அப்போதும் டிராபிக் பகவான் எங்களுக்கு தரிசனம் தந்து நிற்க வைத்தார். சரியாக 11:55 -க்கு கடற்கரை வந்து சேர்ந்தோம். மணல்கள் எல்லாம் கிட்டத்தட்ட மறைந்து போயிருந்தன. எங்கு காணினும் மக்கள் தலைகளடா.

கூச்சல், பட்டாசு சத்தம், வான வேடிக்கைகள் என மக்கள் ஆரவாரத்தோடு சத்தம் கடற்கரையை பிளந்து கொண்டிருந்தது. தூரத்தில் சில சிறுவர்கள் எதையும் கண்டுகொள்ளாமல் துப்பாக்கியால் பலூன்களை சுட்டு வெடித்து புத்தாண்டை கொண்டாடினர். அப்போதும் பலூன்கள் வெடிப்பதை பார்க்க முடிந்தது. ஆனால் வெடிக்கும் சத்தங்களை கேட்க முடியவில்லை. சத்தங்களுக்குள் சத்தம் அமிழ்ந்து போய் கொண்டிருந்தன. அன்று இரவு கடல் அலைகளும் கொஞ்சம் அடக்கியே வாசித்தன.

  கடற்கரையில் நடந்த வானவேடிக்கை.

கூட்டத்தில் பிரிந்து போய் விட கூடாது என்று போகும் போதே நாங்கள் சொல்லிகொண்டோம் ஆனால் செயல்படுத்த முடியவில்லை. சிறிது நேரத்திலே நட்சித்திரங்களாய் இரண்டு மூன்று குரூப்பாய் சிதறிவிட்டோம். சரியாக மணி பனிரெண்டு என்ற போது மக்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டிபிடித்து புத்தாண்டு வாழ்த்து செய்தியை பரிமாறி கொண்டனர்.  கூட வந்த எனது நண்பனும் சந்தோசமாக எல்லோரையும் கட்டிபிடித்து வாழ்த்து சொன்னான். அவனது துரதிஷ்டம் பெண்கள் யாரும் அன்று அதிகமாய் அகப்படவில்லை. அப்போது தூரத்தில் ஒரு ஆண்டி வர, பையன் குசியாகினான். நெருங்கி வந்த ஆண்டி அலர்ட் ஆகி, கையை மட்டும் கொடுத்து வாழ்த்து சொல்லி பையனை ஆசுவாச படுத்திவிட்டார்கள். கடைசியில் பிரிந்து போன நண்பர்களை ஒன்று சேர்க்க செல்போனில் தொடர்பு கொள்ளும் போது முக்கால் மணி நேரத்திற்கும் மேலாக, "தற்போது எல்லா லைனும் பிசியாக உள்ளது" என்ற குரல் கூட கேட்கவில்லை.

அன்று மட்டும் சுனாமி வந்திருந்தால் சென்னை மக்கள் தொகை பெருமளவு குறைந்திருக்கும். அங்கே திரை கட்டி "சுறா படம்" போட்டிருந்தாலும் கூட அதே விளைவு நடந்திருக்கலாம். 

மாயன் காலண்டரின் படி 2012 -ல்  உலகம் அழிந்து விடும் என்பது உண்மையானால், இன்னும் ஒரு புது வருடம் தான் பாக்கியா? அப்படி அழியும் என்றால், 2012 படத்தில் ஒருவன் மலைமேல் ஏறி நின்று உலகம் அழிவதை சந்தோசமாக கத்தி கொண்டே சாவான் அல்லவா? அது போல நானும் மிக சந்தோசமாக சாவேன். I hate this life....





ல்யாணிக்கும் எனக்கும் ஆறாவது படிக்கும் போதிலிருந்தே ஓரளவுக்கு பழக்கம் இருந்தது. கல்யாணிங்கறது பக்கத்துக்கு வீட்டு பிகர் இல்லைங்க. பியர் (Beer). அப்போவெல்லாம் என்னோட அப்பா எப்போவாவது கல்யாணியை வாங்கிட்டு வர சொல்லி என்னை பிராந்தி கடைக்கு அனுப்புவார். நான் அப்போது காதல் கொண்டேன் சிறிய வயது தனுஷ் மாதிரி ரொம்ப ஒல்லியா இருப்பேன். அதனால் எனக்கு உடம்பு எறனனும்ன்னுட்டு, என் அப்பா என்கிட்ட சளி மருந்துன்னு பொய் சொல்லி இரண்டு மூடி பியர் கொடுப்பாரு. அதை குடித்து விட்டே நான் என் அம்மாவோடு துணி துவைக்க வயல்வெளி வரப்புகளில் போகும் போது கால்கள் தடுமாறி விழ பார்ப்பேன்.

காலேஜ் படிக்கும் போது, பிரெண்ட்ஸ் எல்லாம் சொல்லிக்கொண்டு திரிவார்கள். முதல் இயர் படிக்கும் போதே பியர் குடித்திருக்கிறேன் என்றும், பிளஸ் டூ படிக்கும் போதே பியர் அடித்தேன் என்றும். "பொடிப்பசங்க" என்று நினைத்து மனதிற்குள்ளே சிரித்து கொண்டு பரிதாபப் பட்டபடியே அங்கிருந்து கிளம்பிவிடுவேன். ஆனால் ஒரு விஷயம் எங்க அப்பாவுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை இரண்டு மூடியளவு பியர் குடித்தால் உடம்பு ஏறாது என்று.

ஒரு கெட்ட பழக்கத்தினால் ஒரு நல்ல பழக்கம் ஏற்படுமா?
முன்னெல்லாம் தினமும் காலையில் எங்க அப்பா போன் பண்ணி பேசும் போது தூங்கி கொண்டிருப்பேன். ஏன்டா இவ்வளவு நேரம் தூங்குற? சீக்கிரம் தூங்கிட்டு சீக்கிரம் எந்திரிக்க வேண்டியதுதான என்று திட்டிகொண்டே இருப்பார். கொஞ்சநாளில் திட்டுவதை விட்டு விட்டார். முயற்சி கைவினை ஆக்கவில்லை. ஆனால் நான் பியர் குடித்த அன்று மட்டும் சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழுந்து விடுவேன். இது என் அப்பாவிற்கு தெரியாத அடுத்த விஷயம். A bad habit makes a good habit. அதனால் சில கெட்ட பழக்கங்களையும் பழகுங்கள். நல்ல பழக்கங்கள் தென்படலாம்.


வ்வொரு புத்தாண்டுக்கும் காலையில் தவறாமல் நான் செய்பவை. 
  1. நேரமாய் எழுந்து குளிப்பது.
  2. பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்றுவருவது. 
கோவிலில் கொடுக்கும் சர்க்கரை பொங்கல் ருசியாக இருக்கும் என்பதையும் தாண்டி இந்த உலகில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காகவும் கடவுளை வழிபடுவேன். நம் வயதை ஞாபக படுத்தும் பிறந்தநாளை போல புத்தாண்டுகள் எனக்கு கடவுளை ஞாபக படுத்துகின்றன.

இந்த புத்தாண்டுக்கு இதெல்லாம் முடித்துவிட்டு அதே வெட்டி நண்பர்களோடு வேடந்தாங்கல் பைக் பயணம் மேற்கொண்டேன். வழியில் நண்பர்கள் மட்டும் அரசு டாஸ்மாக்கில் கொஞ்சம் எரிபொருள் சேர்த்துக்கொண்டனர். ஹாட் ட்ரிங்க்ஸ் அடிச்சா வயிறு எரியுமாமே?. ;-)  நான்  கூல் ட்ரிங்க்ஸ் மட்டும் தான் குடிப்பேன். கூலிங் இல்லைனா அதுவும் குடிக்கமாட்டேன். அந்த டாஸ்மாக் சுவரில் அந்த வாசகத்தை அப்போதுதான் கவனித்தேன். "பாரை சுத்தமாக வைத்திருக்க உதவுங்கள்". எனக்கு பீர் அடிக்காமலே குழப்பம் ஏற்பட்டது. இங்கே "பார்" என்பது தமிழ் வார்த்தையா? இல்லை, ஆங்கில வார்த்தையா? குறிப்பாக சென்னையில் அரசு டாஸ்மாக் உள்ளே போனால் குடிக்க ஆரம்பிக்கும் முன்னமே வாந்தி வந்து விடும். அதற்கு அப்புறம் வாந்தி வராது. பிரெஷ் ஆக குடிக்கலாம். எது எப்படியோ. உங்கள் வீட்டிற்க்கு அருகில் உள்ள பாரை(Bar) சுத்தமாக வைத்திருங்கள். அப்புறம் நம்முடைய பார் (உலகம்) தானாக சுத்தமாகும். சரி, Back to வேடந்தாங்கல்.

                                                                   
                                             
வேடந்தாங்கலுக்கு 15 கிலோமீட்டர் முன்பிருந்தே சாலையின் இரு புறமும் சமவெளியை போன்ற நிலங்கள் உட்கார்ந்து ஓய்வு எடுத்து குடித்து கும்மாளமாய் பொழுதை கழிக்க அருமையான இடம். நாங்களும் வண்டியை ஓரமாய் நிறுத்தி சிறுநீர் மட்டும் கழித்து விட்டு கிளம்பி விட்டோம். போகும் வழியெல்லாம் மக்கள் பிக்னிக் ஸ்பாட் போல குடும்பத்தோடும், நண்பர்களோடும் சாப்பிட்டு கொண்டும் விளையாடி கொண்டும் இருந்தார்கள்.சென்னைவாசி குடும்பஸ்தர்களும், குடும்பஸ்தர் ஆக போகிறவர்களும், ஒரு நாள் மகிழ்ச்சியாய் பொழுதை கழிக்க ஒரு முறை போய் வரலாம்.

We started this new year celebration with one beer and closed it by opening the another bear. A good beer will give you a happy good year.



சில சமயம் இந்தியன் கிரிக்கெட் அணி அதிரடியாய் ஆடி வெற்றிபெறும் போதும், படு கேவலமாய் தோற்கும் போதும் ஒரே மாதிரியான சந்தோசத்தையே எனக்கு கொடுக்கும். அதுபோலவே அருமையான படங்கள் வந்து தரும் மகிழ்ச்சியை போலவே, படு மொக்கையான படங்களும் நிகராக அக மகிழ்ச்சியை தரும். சமீபத்திய மகிழ்ச்சிகள். சித்து + 2 first attempt மற்றும் விருத்தகிரி. சித்து +2 படத்தை பாக்யராஜின் பழைய ரசிகர்கள் யாராவது தற்செயலாகவோ இல்லை ஆசைபட்டோ பார்க்க நேரிட்டால், இப்படத்தை பாக்யராஜ் தான் திரைக்கதை எழுதி இயக்கினார் என்று அவரே முருங்கைகாய் மேல் அடித்து சத்தியம் செய்தாலும் நம்ப மாட்டார்கள். அடிக்கடி முருங்கைமரம் ஏறும் வேதாளமாய் இந்த படத்திலும் முருங்கைக்காய் சீனை வைத்து இந்த படத்தை எடுத்தது அவர் தான் என்பதை தெள்ள தெளிவாக உணர்த்துகிறார். வாழ்க முருங்கைக்காய்!. வளர்க முருங்கைக்காய்!.  சித்து +2 வும், விருதகிரியும் நம்மை சிரிக்க வைப்பதில் நீயா? நானா?  என்று போட்டி போட்டாலும் கடைசியில் விருதகிரியே வெல்லும் என்பது என் அனுமானம்.




லாநிதி மாறன் அய்யா அவர்கள் எந்த படத்தை தயாரித்து வெளியிட்டாலும் அது மிக பெரிய வெற்றிபெறும். தமிழர் பெருமையை உலகறிய செய்த எந்திரனை இவரை தவிர வேறு யாரும் எடுத்து வெளியிட்டிருந்தாலும் அது இவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருக்காது. அப்படியிருக்க ஒரு மாறனோடு இன்னொரு மாறன் இணைந்தால் அது எவ்வளவு பெரிய வெற்றியை கொடுக்கும். அந்த வகையில் வெற்றிமாறனின் "ஆடுகளம்" படத்தின் வெற்றி முன்கூட்டியே தெரிந்த ஒன்று தான். கலாநிதி மாறன் அவர்கள் இந்திய திரைத்துறைக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து. கலைகளை காப்பாற்றும் கலைநிதி மாறன். ஆத்தே ஆத்தே ஆத்தே! எனக்கு என்னாச்சு? இப்படி கலாநிதி மாறனை புகழ்கிறேன். காரணம் இரண்டு வாரங்களுக்கு முன்பு சன் டிவியில் ஆடுகளம் படத்தின் பாடல் கேசட் வெளியிட்டு விழாவை கண்டுகளித்தத்தின் விளைவுதான் இது. பாலுமகேந்திராவை தவிர மேடையில் இருந்த ஒவ்வொருவரும்  கலாநிதி மாறன் அவரை சிலையே வைக்காத கடவுளாக பாவித்து பஜனை பாடினார்கள். அவர் மட்டும் அன்று மேடையில் இருந்திருந்தால் காலை பிடித்து. #$%$$@*&^*&@^*&#%$^.................................   அவர்கள் பிழைக்க தெரிந்தவர்கள். காசேதான் கடவுளடா! கடவுளுக்கே அது தெரியாதடா!.



போன ஞாயிற்று கிழமை பெங்களூர்ல இருந்து என் நண்பன் "மணி" புத்தக கண்காட்சிக்காக சென்னை வந்திருந்தான். புத்தக கண்காட்சியை பற்றியும் கொஞ்சம் என்னை பற்றியும் ;-) அவனது பதிவு. ரூபாய் மூவாயிரத்திற்கும் மேலாக அவன் புத்தகம் வாங்கினான். நான்?... அவன் வாங்கிய புத்தகங்களை சுமந்து கொண்டு வந்தேன். ஆனால் கடைசி வரைக்கும் நான் தேடிய புத்தகம் கிடைக்கவேயில்லை. ஹி!ஹி!. சில வருடங்களுக்கு முன்பே "புத்தகம் படிக்கும் பழக்கம்" என்னை புடிக்காமல் ரொம்ப தூரம் போய்விட்டது. இப்போது என்னால் குமுதம், ஆனந்த விகடன் கூட உட்கார்ந்து பொறுமையாக படிக்க முடியவில்லை. காலேஜ் செமஸ்டர் எக்ஸாம்க்கு படிப்பது போல தலைப்பை மட்டும் படித்துவிட்டு  தூக்கி எறிந்து விடுவேன்.

கண்காட்சிக்கு உள்ளே போன பின்பு ஏகப்பட்ட ஸ்டால்கள் மற்றும் புத்தகங்கள் இவற்றை பார்த்து விட்டு எனக்கும் ஏதாவது புக் எழுதணும் போல மனம் பரபரத்தது. ஆனால் கிழக்கு பதிப்பகம், உயிர்மை ஸ்டால்களில் சுஜாதாவை பார்த்த பின்பு அந்த ஆசை எல்லா புத்தக ஸ்டால்களுக்குள்ளும் புகுந்து ஓடி எகிறியது. எங்கு பார்த்தாலும் சுஜாதாவே வியாபித்திருந்தார் ஒரு கடவுளை போல. "சுஜாதா ஸ்டால்" என்று தனியாகவே வைக்கலாம் என்ற அளவுக்கு அதனை புத்தகம் எழுதி உள்ளார்.



"ஸ்பெக்ட்ரம் சர்ச்சை" என்ற புத்தகம் கூட வந்துள்ளது. அந்த புத்தகத்திற்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று தான் பெயர் வைத்திருக்க வேண்டும் என்று ஞானி அவர்கள் அதை எழுதிய ஆசிரியருக்கு குட்டு வைத்துள்ளார். என்னோமோ பண்ணுங்க. ஆனா ஆ.ராசாவுக்கு விக்கிறதுல பாதி பங்கு வந்துடனும். எவ்வளவு கஷ்டப்பட்டு ஊழல் பண்ணி இருக்கார்.

அப்படியே உயிர்மை ஸ்டாலில் இருந்து வெளியே வந்த நான், என் கண்ணில் பட்ட அந்த போஸ்டரை பார்த்த பின்பு அப்படியே உறைந்து போனேன். அந்த போஸ்டர் உங்கள் பார்வைக்காக கீழே. NO confusion இவர் சிவாஜி இல்லை.

                                                      
கடைசியில் வீட்டிற்க்கு வந்த பின்பும் என் மனதை மிகவும் வருத்தமடைய செய்த விஷயம் "நம்பர் ஒன் எழுத்தாளர்" ம.வே.சிவகுமார் அவர்களின் ஒரு புத்தகம் கூட என் நண்பன் வாங்கவில்லையே என்பதுதான்.



விருத்தகிரி நமீதா திரை விமர்சனம்..... விரைவில்...


4 comments:

Anonymous said...

ஆஃபாயில் இந்த தடவ கொத்து பரோட்டா அளவுக்கு இருக்கு பாஸ்! ;)

Philosophy Prabhakaran said...

புத்தக சந்தைக்கு வந்தீர்களா... ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே... நான் ரெண்டு நாள் போறா அங்கதான் பாழியா கிடந்தேன்...

Madurai pandi said...

எல்லாம் கலந்து கட்டி அடிசுருக்கீங்க!! வெங்காய விலை உயர்வால் கொஞ்சம் காரம் கம்மியா இருக்கு!!!

krishnaveni said...

wow......soooo nice......i like it.....