நம் ஒவ்வொரு சந்திப்பிலும்
தாங்கள் பேச வேண்டிய வார்த்தைகளை
விழிகளை விட்டே பேச வைக்கும்
நம் இதழ்களை கொஞ்சம்
கடுமையாய்
தண்டிப்போம்
வா!
டிஸ்கி : இதன் ஆங்கில பதிப்பு இங்கே.
மீண்டும் கவிதை எழுதுகிறேன்.
முகப்பருக்களின் மறுவிளைச்சல்.
பிறந்துவிட்டது
என் இரண்டாவது காதல்.
வருடத்தில் ஒரு முறையாவது
நீ என்னை நினைக்க வேண்டும்
என்பதற்காகத்தான்
உன் பிறந்த நாளில் என்
இறந்த நாள்.
இரவின் பிள்ளை நான்
நிலவைத் தேடுகிறேன்
அழகின் பஞ்சத்தில் என்னை
கடவுள் படைத்தான்
கள்ளிப் பூக்களாய்
தனிமை என் இடம்தான்
நீரின் அருகாமையா?
சற்றே ஒதுங்குகிறேன்
என் உருவம் தெரிவதனால்
கண்ணாடியை வெறுக்கிறேன்
என்னை அழகாய்க் காட்டுவதில்லை
இயற்கையை வைத்துக்
கவிதைகள் எழுதுகிறேன்
செயற்கைத்தனமாய் காதல் கவிதையும்
உண்ட அவசரத்தில்
உறங்கச் செல்கிறேன்
கனவிலாவது காதல் கிட்டுமென்று
நிழற்படம் எடுக்கையில்
சரி பார்த்தே நிற்கிறேன்
அழகாய் இருந்ததாய்
இதுவரை சரித்திரம் இல்லை
காதல் கைகூடாது
ராசிபலன்களின்
வாழ்நிலை அறிக்கைகள்
தனிமை என் ராஜாங்கம்
விளையாடுகிறேன் சதுரங்கம்
ராணி இல்லாமல்.
உன் பார்வைக்கு
அலையும் என் கண்கள்
உன் குரல் வேண்டி
கேளாவிரதம் இருக்கும் என் செவிகள்
உன் வாசத்திற்கு
வசமாகும் என் நாசி
உன் முத்தத்தை
வாய் விட்டுக் கேட்கும் என் இதழ்
உன் தோள் உரசி
நடக்கத் துடிக்கும் என் தோல்
என் செய்வேன்?
என் ஐம்புலன்களுக்கு அடக்கமில்லை.