Apr 20, 2011

நகுலன் என்றொரு அழகன்

என் அக்கா பையனுக்கு,



கன்னி ராசிதான்
இந்த கண்ணனுக்கு
கணக்கில்லை
பின்தொடரும் இளங் கன்னிகளுக்கு.


வேட்டையாடுவதில் மாவீரன்
இவனை கண்டாலே
நடுநடுங்கும்
சிங்கம் புலி கரடி (பொம்மை)கள்.


இவன் கை பட்டு
கவிழவே காத்திருக்கின்றன
சரியாக மூடப்படாத
பலசரக்கு டப்பாக்கள்.

நிற்கவே நேரம் இருக்காது
எந்நேரமும் இவன் பின்னாலேயே
ஓட வைத்துக் கொண்டிருப்பான்
பாட்டியையும் தாத்தாவையும்.

பார்க்கும் அநேக நேரம் 
பூனையை இவன் துரத்திக் கொண்டிருப்பான்.
சில நேரம் பூனை 
இவனை துரத்திக் கொண்டிருக்கும்.





Related post :  The Good Stranger: கார்த்திகா தீபா வாழ்த்துக்கள்

 


Mar 18, 2011

கலைஞரின் கதாநாயகி, ஜெயாவின் கவர்ச்சி நாயகி - ஆபாயில்

என்னுடன் படித்த நண்பர்களில் நிறைய பேருக்கு திருமணம் ஆகி தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இன்னும் சிலருக்கு தப்பிக்க சிறிது கால அவகாசம் கொடுக்கப் பட்டுள்ளது. நான் இன்னும் எதை பற்றியும் கவலை படாமல் ஒரு நாயை போல தெருக்களில் உலா வந்து கொண்டிருக்கிறேன். கடந்த மாதம் மட்டும் மூவருக்கும் மேலாக தண்டனை உறுதி செய்யப் பட்டு வீட்டு காவலில் வைக்கப் பட்டுள்ளார்கள். நாமும் அப்போது அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு எஞ்சிய நாட்கள் முழுதும் அவர்கள் முடிந்த வரை சந்தோசமாக வாழுமாறு வாழ்த்த வேண்டிய நிர்பந்தம் உள்ளது. தன் கஷ்டங்களில் பங்கு கொள்கிறவன் தான் உண்மையான நண்பன். அவ்வாறு தன்னுடைய திருமணதிற்கு யார் வருகிறார்களோ என்பதை வைத்து தான் உண்மையான நண்பன் யார் என்பதையும் முடிவு செய்யப் படுகிறது. அதனால் நானும் முடிந்தவரை எல்லோருக்கும் உண்மையாகவே இருக்க விரும்புகிறேன்... ;-)

இன்றும் ஒருவனது திருமண வரவேற்பு நிகழ்சிக்காக புறப்படுகிறேன். அவன் பெயர் "பொய் புலவர் பிரகாஷ்". இவனுக்கு அரிச்சந்திரன் யார்? அவர் எப்படி பட்டவர்? என்ற வரலாறு துளியும் தெரியாது. அந்த அளவுக்கு இவனுக்கு உண்மைக்கும் நெருங்க முடியாத தூரம். ஒரு சின்ன உதாரணம். இவனுக்காக காத்திருக்கும் போது, மொபைல் போனில் அழைத்து "மச்சி எங்கேடா வந்துட்டு இருக்க?" என்று கேட்டால், அவங்க வீட்டு பாத்ரூமில் "இருந்து" கொண்டு பத்து நிமிஷத்தில் வந்து விடுவதாக கூச்சப் படாமல் அள்ளி விடுவான்.

ஒவ்வொரு வாரமும் விஜய் டிவியில் "அது, இது, எது?" என்று ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்புவார்கள். அதில் கடைசி சுற்றில், நிகழ்ச்சியில் பங்கேற்பவர் கதை ஒன்று சொல்ல வேண்டும். அதில் மூன்று பொய்களை, கதை சொல்லுபவர் திணித்து சொல்லியாக வேண்டும். இன்னொருவர் அவர் சொன்னதில் மூன்று பொய்யையும் கண்டுபிடித்து கூற வேண்டும். அதை போல இவனை ஒரு கதை சொல்ல சொல்லி, அதில் ஒரு உண்மையை கண்டு பிடிக்க சொன்னால், பெரும் சவாலான விஷயம்.

இவனை பற்றி முன்னரே ஒரு இடுகையில் எழுதி உள்ளேன்.

ஆனால் ஒரு நல்ல விஷயம் இவனிடம் உள்ளது. எந்த ஒரு அரசியல்வாதியிடம் கூட காணப்படாத மதசார்பற்ற தன்மை இவனிடம் மட்டுமே உள்ளது. எவ்வாறு எனில், பொழுது போக்காய் பல பெண்களிடம் பேசுவான். அப்படி புதிதாக ஒரு பெண்ணிடம் பேசும் போது ஏதோ இந்திய ரகசிய உளவு துறையில் வேலை செய்வது போல உண்மையான பெயரை மட்டும் சொல்லவே மாட்டான். அவ்வபோது அவன் கண்களுக்கு தட்டுப் படுகிற பெயரை தன் பெயராக சொல்லி விடுவான்.

சில சமயம் மகேஷ்.
சில சமயம் ஜேம்ஸ்.

ஒரு நாள் நானும் அவனும் பாய் கடையில் பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்தோம். அப்போது அவனுக்கு ஒரு பெண்ணிடம் இருந்து அழைப்பு வர, தன் பெயரை காதர் பாய் என்று கடையின் பெயர் பலகையை படித்து அறிமுக படுத்தி கொண்டான். இவனுக்கு மத பாகுபாடு என்பது துளியும் இல்லை என்பதை அந்த மதிய நாளில் லெக் பீசை கடித்துக் கொண்டே உணர்ந்தேன். இவன் கல்யாண அழைப்பிதழ் கொடுக்கும் வரை, நாங்களும் இவன் பெயர் பிரகாஷ் என்ற அனுமானத்தில் மட்டுமே இருந்தோம்.

லெக் பீசை பற்றி பேசும் போது தான் இன்னொன்றும் ஞாபகம் வருகிறது. நம்மில் நிறைய பேர் பெண்களை பற்றி பேசும் போது பிகர் என்று தான் குறிப்பிடுவோம். ஆனால் இவன் "பீஸ்" என்றே குறிப்பிடுவான். அப்போ பிரியாணில இருக்கிறது என்ன பிகரா?

ஒரு நாள் அவனுடன் வழியில் சென்று கொண்டிருக்கும் போது "இந்த பீசு எப்படி இருக்கு?" என்று கை காட்டினான். திரும்பி பார்த்தால் அங்கே ஒரு பெண் சிமெண்ட் காரை சட்டியை தூக்கி கொண்டு சென்று கொண்டிருந்தாள். ஏழை பணக்காரர்கள் பாகு பாடும் இவனுக்கு பார்க்க தெரியவில்லை.

இவனுக்கு இன்னொரு பெயரும் உண்டு. அது "குடி பிரகாஷ்". பெயர் காரணம் தேவையில்லை என்று நினைக்கிறேன். நிறைய நண்பர்கள் கூப்பிடும் பெயரும் இதுவே. தினமும் குடிப்பதாய் அவனே சொல்லுவான். ஆனால் அவனுக்கு ஒரு டூவீலர் மட்டும் வாங்க காசே இருந்ததில்லை. ஒரு பன்னிகுட்டி உருவ உண்டியல் வாங்கி தினமும் குடிக்கும் காசை அதில் போட்டு வைத்திருந்தால் எளிதாய் ஒரு டூவீலர் வாங்கியிருக்கலாம்.

இவன் எங்கு பயணம் செய்தாலும் கூடவே ஒரு லேப்டாப் Bag-ம்  வைத்திருப்பான். உள்ளே லேப் டாப் இருக்காது. நிறைய கோக், பெப்சி பாட்டில்களும், தண்ணீர் பாட்டில்களும் இருக்கும். ஆச்சாரம் உள்ளவர்கள் ஒரு அவசரத்துக்கு கூட இவனிடம் தண்ணி வாங்கி குடிக்க முடியாது. ஏனென்றால் எல்லாம் மிக்சிங்கோடு(Mixing) இருக்கும். எவ்வளவு தான் குடித்தாலும் மிகவும் நிதானமாக இருப்பான். சிறிதும் உளறவே மாட்டான். ஆனாலும் குடிக்காத நாட்களில் மட்டும் உளறுவான்.



ந்த உலக கோப்பையை ஆஸ்திரேலியா அல்லது பாகிஸ்தான் தான் வெல்லும் என்பது என் அனுமானமாக இருந்தது. இப்போது ஆஸ்திரேலியா வெளியேறி விட்டது. பாகிஸ்தானிடம் தான் அரை இறுதியில் இந்தியா தோற்க வேண்டும் என்று எழுதி இருக்கலாம். ஆனால் இந்தியா அவ்வளவு எளிதாக விட்டு விடாது. இந்தியாவின் மேல் நடந்த பாராளுமன்ற தாக்குதல், மும்பை மற்றும் டெல்லி தாக்குதல் இவற்றிற்கு பதிலடியாய் அரை இறுதி போட்டியில் வென்று பலி தீர்க்கும் என்றே இந்திய குடிமக்கள் எல்லோரும் ஆவலாய் உள்ளார்கள். அப்போது தான் மும்பை குண்டு வெடிப்பில் பலியான மக்களின் ஆவிகள் எல்லாம் சாந்தி அடையும். அப்படி இந்தியா பாகிஸ்தானை வென்று உலக கோப்பையையும் வெல்லும் பட்சத்தில், நாடாளு மன்றத்தில் இந்திய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, கசாபையும் விடுதலை செய்வார்கள். இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றத்தை எண்ணி வருத்தப்படுவதை விட கசாப்புக்கு வேறு என்ன தண்டனை மற்றும் அவமானம் இருக்க முடியும்?



து தேர்தல் காலம் என்பதால், தி.மு.க. கலை உலக வாரிசுகள் தங்கள் பட வெளியீட்டை கொஞ்ச காலம் நிறுத்தி வைத்திருந்தாலும், கலைஞர் ஒரு கதாநாயகியையும், ஒரு கதா நாயகனையும் அறிமுகப் படுத்தியிருக்கிறார். கதாநாயகி தேர்தல் அறிக்கை என்று உங்களுக்கு தெரியும். காதாநாயகன் கீழே இருக்கிறார். நடிகர் விஜயகுமார் குடும்பத்தை பின்னுக்கு தள்ளி இப்போது கலைஞரின் குடும்பம் தான் மிகப்பெரும் கலை குடும்பமாக உருவெடுத்துள்ளது. உங்க கலை ஆர்வத்துக்கு ஒரு அளவே இல்லடா.



இப்போது ஜெயலலிதா கவர்ச்சி நாயகியை வெளியிட்டு விட்டதால் கதாநாயகியை பற்றி ஏதும் சொல்லத் தேவையில்லை. 

பெண்ணை பெற்ற ஏழைகள் எல்லாம் இனி கவலை பட தேவையில்லை. கிரைண்டர், மிச்சி, பேன், நாலு கிராம் தங்கம், ஆடு, மாடு இவைகளோடு ஒரு கட்டில் மெத்தையும் கொடுத்திருந்தால் பெண்ணுக்கு கொடுக்க வேண்டிய சீர் ரெடி. கலைஞர் தாத்தாவின் கதாநாயகி, 1970 களில் வந்த கருப்பு வெள்ளை நாயகியை போல, வயது முதிர்ந்தவர்களையும், குடும்ப தலைவிகளையும் மட்டுமே பெரிதளவு கவர்ந்திருந்தது.

ஆனால் கவர்ச்சி நாயகி ஷகிலாவை போல, பள்ளி மாணவர்களில் இருந்து கிழவர்கள் வரை கவர்ந்து இழுத்து இருக்கிறது. இப்போது குடும்ப பெண்கள் கூட கவர்ச்சி நாயகியையே விரும்புகிறார்கள். பத்தாவது படிச்சிட்டு கட்டட வேலைக்கு போற என் பள்ளி பருவத்து நண்பன் கூட, இப்போ பதினொன்னாவது படிக்கலாமன்னு யோசிக்கிறான். தமிழகத்தில் செல்போன்கள் சாதரணமாகிவிட்ட காலகட்டத்தில் லேப்டாப்களும் சாதரணமாக போகின்றன.

போடுங்கம்மா ஒட்டு இரட்டை இலைய பாத்து...





வோடபோனின் சமீபத்திய இந்த விளம்பரம் என்னைய மிகவும் ரசிக்க வைத்தது.




இதோட விளம்பரத்துக்காகவே நான் வோடபோனுக்கு மாறலாமான்னு யோசிக்கிறேன். நானும் இந்த விளம்பரத்தில் வர்ற "சூப்பர்மேன் ஜூ ஜூ" மாதிரி மாறிட்டேன். டேபிள் டென்னிஸ் மட்டைக்கு பதிலாக கொசு அடிக்கும் மட்டை. தினமும் இரவு தூங்க முடியல. பயங்கர கொசு. அதனால இந்த மட்டைய எடுத்து கண்ணை மூடிக்கிட்டு, திரும்பி நின்னு, சிலசமயம் இருட்டுல கூட, எப்படி அடிச்சாலும் கொசு அடிபட்டு சாகுது.




Feb 18, 2011

வடை, பக்கோடா, போண்டா - மினி ஆபாயில் (அப்புடியே சாப்பிடுங்க)

வடை, பக்கோடா, போண்டா இந்த மூன்றிற்கும் என்ன சம்பந்தம் இருக்கு? படியுங்கள், விடை கடைசியில்.


ன்கூட தங்கி இருக்கும் வினோத் என்ற பிரெண்டுக்கும் எங்கள் அபார்ட்மெண்டு ஆண்டிகளுக்கும் "ரொம்ப நாளாக பழக்கம்" இருக்கு. எப்படி என்றால், இவன் தினமும் மெகா சீரியல் பார்க்கும் வழக்கம் கொண்டவன். கலைஞர் டிவி, ஜெயா டிவி என்ற பாகுபாடு எல்லாம் இவனுக்கு பார்க்க தெரியாது. மிகவும் அப்பாவியாய் எல்லா டிவி சீரியலையும் உட்கார்ந்து அமைதியாய் பார்த்து ரசிப்பான். அந்த ஆண்டிகள் ஏதோ ஒரு எபிசொட் பார்க்க தவறினால் இவனிடம் தான் வந்து அன்றைக்கு என்ன நடந்தது என்று கதை கேட்டு போவார்கள். அதனால் எங்கள் வீட்டிற்கு ஆண்டிகளின் படையெடுப்பு அடிக்கடி நடக்கும். "ரொம்ப நாளாக பழக்கம்" என்றதும் நீங்கள் அவனை பற்றி தப்பாக  நினைத்திருந்தால் உங்கள் தலையில் நீங்களே குட்டி கொள்ளவும்.

"ஏன்டா இவ்வளவு விரும்பி பார்க்கறியே பேசாமல் சீரியலில் நடிக்க போய்விட வேண்டியதுதான?" என்றேன் தற்செயலாய் அவனிடம். "இம், நான் ரெடி" என்றான். சீரியல் இயக்குனர்கள் அல்லது தயாரிப்பாளர்கள் யாராவது இதை படித்துக்கொண்டிருந்தால் தயவுசெய்து இவனுக்கு ஒரு வாய்ப்பை கொடுங்கள். "கொழுக் மொழுக்" என்ற அங்கிள் கேரக்டருக்கு அம்சமாக பொருந்தி வருவான்.


  
நீங்கள் பேச்சுலராக இருந்து கூட படித்த அல்லது வேலை செய்கிற பசங்களோடு தங்கி இருந்தால் "ட்ரீட் (Treat) என்கிற வார்த்தையை அதிகமாக மந்திரம் போல உங்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். கடந்த வாரம் என் அக்கா பையனுக்கு என் மடியில் வைத்து மொட்டை போட்டு காது குத்தினார்கள்.

அதற்கு ட்ரீட் வைக்க சொல்லி நண்பர்கள் எனக்கு மொட்டை போட பார்த்தார்கள். "இப்போது பணம் இல்லை" என்று அடுத்த மாதம் கொடுப்பதாய் சொல்லி அவர்களுக்கு காது குத்தியுள்ளேன்.



விலைவாசி உயர்வு, ஊழல் நாடகம் இவற்றையெல்லாம் தாண்டி கவலைப்பட இப்போது இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன. கிரிக்கெட் உலக கோப்பை, தேர்தல், இலவசம். 

பரம ஏழை சச்சினுக்காக இந்திய அணி உலக கோப்பையை வெல்லுமா? 
அவரின் பட வெளியீட்டு பிரச்சனையையே தீர்க்க முடியாமல் கஷ்டபட்ட காவலன் விஜய்,  போராட்டம் நடத்தி மீனவர்களின் பிரச்சனையை தீர்ப்பாரா?
வல்லரசு விஜயகாந்த் தேர்தலில் வென்று நல்லரசு அமைப்பாரா?

அன்று ஒரு நாள் பஸ்சில் சென்று கொண்டிருந்தேன். அப்போது வெளியே ஒரு சேரி போன்ற குடிசை பகுதியில், விஜயகாந்தின் தே.தி.மு.க. கட்சியின் பெரிய சைஸ் போஸ்டர் ஒன்று ஒரு குடிசை வீட்டின் மேற்கூரையாக வைக்கப் பட்டு அவர்களை கடும் குளிரிலிருந்தும் வெயில், மழையில் இருந்தும் காப்பாற்றி கொண்டிருந்தது.

விஜயகாந்தின் விருத்தகிரி படத்தில் அடிக்கடி ஒரு வசனம் வெவ்வேறு கதா பாத்திரங்களால் பேசப் படும். 

"அரசு அதிகாரியா இருக்கும் போதே பொது மக்களுக்கு இவ்வளவு நல்லது பண்றாரே, இவருக்கு கீழே அரசாங்கம் வந்துச்சுன்னா எவ்வளவு நல்லது பண்ணுவாரு." 

அது மாதிரி, விஜயகாந்தின் கட்சி போஸ்டரே ஏழைகளை காக்கும் பொது விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தார்ன்னா, என்னமா காப்பாத்துவாரு! 


சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பது எனக்கு இதுவரை ஓரளவுக்கு நல்ல அனுபவமாகவே அமைந்துள்ளது. ஆனால் கடந்த வாரம், சில வருடங்களாய் கவிதை என்ற பெயரில் ஏதோ கிறுக்கி வரும் என்னை மிகவும் வெட்கமடைய செய்தது, ரயிலில் கிறுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த கவிதை.


தட்டி போட்டா வடை.
அப்படியே போட்டா பக்கோடா.
உருட்டி போட்டா போண்டா.

எனக்கு ஏன் இப்படி ஒரு கவிதை எழுத தோணவில்லை.

போண்டா போச்சே!.

இந்த கவிதை படித்ததும் வடை, பக்கோடா, போண்டா இந்த மூன்றும் என் கண்முன்னே சிறிது நேரம் வந்து என் பசியை தூண்டியது. மூன்று வரிகளில் ஒரு முத்தான கவிதையை எழுதிய அந்த கவிஞர் ஏனோ கவிதைக்கு கீழே அவர் பெயரை எழுதியிருக்கவில்லை. அவருக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை "பாராட்டு" என்பதாக கூட இருக்கலாம்.

பொதுவாக கழிப்பிட சுவர்களில் உள்ளதை போன்றே ரயிலின் உட்புறத்திலும் Nithyaanantha Loves Ranjitha, Prabudeva Loves Nayan என்பது மாதிரியான கல்வெட்டு வாசகங்கள் தான் நிறைய காணப்படும். ஆனால் இதுபோன்று ஒரு தத்துவ கவிதை எழுதி இவர் அந்த இலக்கணத்தை உடைத்துவிட்டார். Hats Off  to him.

நெடுந்தூர ரயில் நிலையங்களை போல, மெட்ரோ ரயில் நிலையங்கள் அவ்வளவாக துர்நாற்றம் வீசுவதில்லை. கழிப்பிட வசதி இல்லை என்பதால். ஆனால் இன்னுமொரு பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. ரயிலில் ஏறி அமர்ந்தவுடன் பார்த்தேன் ஒரு பெண்  ஐபாட்(ipad) -ல் பாட்டு கேட்டு கொண்டு தலையையும் லேசாக காலையும் ஆட்டிக்கொண்டிருந்தாள். சில பேர் எதையும் கேட்காமல் காலை மட்டும் ஆட்டிக்கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் நானும் காலை ஆட்ட தொடங்கி விட்டேன். காரணம். கொசுக்கடி.

ஓடும் ரயிலில் பறந்து பறந்து கடிக்கின்றது. பிகர்களுக்கு எதிரே கடிக்கின்ற கொசுவை அடிக்கவும் அசிங்கமாக உள்ளது. பத்தாம், பனிரெண்டாம் போது தேர்வு வரும் போது தமிழ் தினசரி செய்தித்தாள்களில் போடுவார்கள். "தேர்வுகளில் காப்பி அடிப்பவர்களை பிடிக்க தனி பறக்கும் படை அமைக்கப் பட்டுள்ளது" என்று. இனிமேல் தயவு செய்து பறக்கும் படை என்ற வார்த்தையை அதற்கு உபயோகப் படுத்தாதிர்கள்.



Jan 28, 2011

பாட்டிக்கு ஒரு பாட்டு - ஆபாயில் (அப்புடியே சாப்பிடுங்க)

ந்த வாரம் நண்பர் ஒருவர் திருமண அழைப்பிதழ் கொடுக்க எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். முன்பு எங்களோடு தான் தங்கி வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது நாங்கள் வெளியே சாப்பிட சென்றாலோ அல்லது ஒன்றாக சினிமாவிற்கு சென்றாலோ முடிந்த அளவிற்கு மற்றவர்கள் தலையிலே மொய் எழுதும் திறமை நன்கு வாய்த்தவர். எனவே மீண்டும் அவருடைய திருமணதிற்கு வந்து கடைசியாக ஒருமுறை மொய் எழுத சொல்லி என்னை வலுக் கட்டாயப் படுத்தினார். எனக்கு அலுவலகத்தில் வேலை அதிகம் உள்ளது என்று சொல்லி தப்பிக்க பார்த்தேன். "அதெல்லாம் முடியாது. நீதான் எனக்கு தாலி எடுத்து கொடுக்கணும்" என்று பாசத்தில் திணற வைத்தார். அப்போது என்னை அறியாமல் "புதுப்பேட்டை" படத்தின் காட்சி என் மனதில் பிளாஷ் ஆகி போனது. ஏனென்றால், அவருக்கு வரப்போகும் பெண் மிகவும் அழகானவங்க.



திரைத்துறையில் நிறைய மனிதர்கள் திறமை அதிகம் இருந்தும் அதிர்ஷ்டம் இல்லாமல் அல்லல் பட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் ஒன்றை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். கலைஞர் தாத்தா உயிரோடு இருக்கிறவரை கொஞ்சம் பொறுமையாய் இருங்கள். இல்லையென்றால் வாலியாய் இருந்தாலும் வைரமுத்துவாய் இருந்தாலும் அவர் வசனம் எழுதும் படங்களைப் பார்த்து "அருமையான படம். பா. விஜய் சிறப்பாய் நடித்திருக்கிறார்." என்று சிரிப்பை அடக்கி கொண்டு மைக்கின் முன்னால் பேச வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாக வேண்டிவரும். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்பது எவ்வளவு உண்மையானது என்று உணருங்கள்.

குடியரசு நாளன்று மனம் மிகவும் மந்தமாய் தோன்றியது. சிறுவயதில் பள்ளிக்கூடம் செல்கையில் குடியரசு தினத்தன்று மிட்டாயும் பொரியும் கொடுப்பார்கள். இப்போது கணிப்பொறி மட்டுமே கையில். இப்போதெல்லாம் குடியரசு தினம், சுதந்திர தினம் எதுவாய் இருந்தாலும் "Its just another Saturday or Sunday". சரி, எப்படிதான் இன்றைய பொழுதை கழிப்பது என்று வெளியே சென்று வீட்டிற்க்கு அருகில் உள்ள பேக்கரியில் டீ குடித்து கொண்டே தீவிரமாய் சிந்தித்தேன். அப்போது அந்த பேக்கரியில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் போக்கிரி படம் ஓடிகொண்டிருந்தது. ஒருதடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் என்று ஹீரோ பன்ச் விட்டு கொண்டிருக்க உடனே கடைக்காரர் தன் முடிவை மாற்றி ரிமோட் எடுத்து சேனலை மாற்ற "ராஜ் உலக தொலைக்காட்சி" சேனலில் ரோஜா படத்தை நூற்றி எட்டாவது முறையாக வாங்கியதிற்கு வஞ்சகம் இல்லாமல் ஒளிபரப்பி கொண்டிருந்தார்கள்.

மறுபடியும் கடைக்காரர் சேனலை மாற்ற "இசைஅருவி"யில் இரண்டு இளைஞர்கள் தங்கள் புஜபலத்தை காண்பித்து கொண்டிருந்தார்கள். மூன் (Moon) மியூசிக்கில் ஒரு பெண் "Peace Girl" என்ற வாசகம் கொண்ட ஒரு டீ-சர்ட்டினை அணிந்து கொண்டு "உங்க வீட்டு டிவி சவுண்ட கொஞ்சம் குறைங்க" என்று கால் செய்த நேயரிடம் கத்தி குரைத்துக் கொண்டிருந்தாள். அப்போதுதான் அந்த ஐடியா சட்டென்று உதித்தது. உடனே என்னுடைய செல்போனை எடுத்து அந்த நிகழ்ச்சியின் எண்ணுக்கு கால் செய்தேன். சிறிது  நேரத்திற்கு பிறகு தொடர்பு கிடைத்தது.

"ஹலோ யாரு பேசறிங்க?"
"ஹலோ மேடம் எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா?"
"இம் சூப்பரா இருக்கேன். வெயிட் பண்ணுங்க. நாம இதுக்கு முன்னாடியே பேசி இருக்கோம். கரெக்டா?"
"இல்ல மேடம்."
"! அப்படியா சரி நீங்க என்ன பண்றீங்க?"
"நான் மெரீனா பீச்சுல சுண்டல் வித்துகிட்டு இருக்கேன் மேடம். போன வாரம் கூட யாரோ ஒரு அண்ணன் கூட நீங்க பீச்சுக்கு வந்து என்கிட்ட தான் சுண்டல் வாங்கி சாப்டீங்க. அப்ப உங்களுக்கு சுண்டல் வாங்கி கொடுத்த அந்த அண்ணன் தான் என்கிட்ட பேசுனாரு நீங்க பேசல"
"சரி சரி மன்னிச்சிருங்க. அடுத்த தடவை யாருகூட பீச்சுக்கு வந்தாலும் உங்கள பார்த்து பேசுறேன். சரியா?"
"ஓகே மேடம்."
"இந்த நிகழ்ச்சிய உங்க குடும்பத்துல எல்லோரும் விரும்பி பார்ப்பிங்களா?"
"ஆமா மேடம். உங்க நிகழ்ச்சின்னா ரொம்ப இஷ்டம். அதுவும் எங்க அப்பாவுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். தினமும் உங்க சேனலை பார்க்கலைனா எனக்கு தூக்கமே வராது."
"ரொம்ப சந்தோசம். அந்த அளவுக்கு பிடிக்குமா?"
"ஆமா மேடம். தினமும் ராத்திரி தூக்கம் வரலைனா உங்க சேனலை தான் பார்ப்பேன். சூப்பர் சூப்பரா இளையராஜா பாட்டு போடுவாங்க. அதை கேட்டு அப்புடியே தூங்கிடுவேன்."
"சரி, உங்களுக்கு என்ன பாட்டு வேணும்?"
"எனக்கு இளைஞன் படத்துல இருந்து 'இமைதூதனே' பாட்டு போடுங்க மேடம். இந்த பாட்டை செத்து போன எங்க பாட்டிக்காக டெடிகேட் பண்ணுறேன் மேடம்."
"இனி உங்க பாட்டிக்கான பாட்டு வருது கேளுங்க. நிகழ்ச்சிய தொடர்ந்து பாருங்க."



அப்புறம் அந்த நாள் மிக இனிமையாக கழிந்தது.


கடவுளுக்கு வேலை இல்லை - தண்டர் கவிதைகள் 2



சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணங்களை
பதுக்கி வைத்திருக்கும் வெள்ளை மனங்களை
மக்களிடம் காட்டிக் கொடுக்க வேண்டாம்.
தமிழக கடல் பகுதிக்குள்
மீன் பிடிக்க அனுப்புங்கள்.
கூடுதலாய் ஒரு ஐந்து லட்சம்
அவர்கள் குடும்பத்திற்கு கிடைக்கும்.

கோடி கோடியா கொள்ளையடிக்கிறாங்க.
ஆனா ஒரு கோடி மேல போட்டு எரிக்க கூட 
உடம்பு கிடைக்க மாட்டேங்குது.

அமெரிக்காவுக்கு போனால் தான்
அவன் ஆன்மீகவாதி.
ஊழல் செய்தால்தான்
அவன் அரசியல்வாதி.
உடனடி சட்டம் இயற்றப்பட வேண்டும்
நாடாளுமன்றத்தில்.

அரசு அதிகாரிகளுக்கு மட்டும் அல்ல
நாட்டுல உயிரோடு உள்ளவனுக்கெல்லாம் போனசு
இலவச சரவெடிகளோடு
இனி வர போகுது
தேர்தல்
இதுதாண்டா உண்மையான தீபாவளி.

புதுமண தம்பதிகளுக்கு மட்டுமல்ல
கெழடு கட்டைகளுக்கும்தான்
அழகா மடிச்சு கொடுப்பாங்க 
வெத்தலைல பணம்.
நாக்கும்  சிவக்கும்
நாடும் சிறக்கும்.

எவ்வளவோ பண்ணிட்டோம்
இதை பண்ண மாட்டமா?
இன்னும் ஒரு சத்தியம்.

எல்லாம் இனிதே அமைதியாக நடந்து முடிந்தது
ஒவ்வொரு தேர்தலுக்கு பின்னும்
திறம்பட செயல்பட்ட
தேர்தல் கமிஷன்.

உண்ண உணவிற்கு
இலவச அரிசி திட்டம்.
உடுத்த உடைக்கு
இலவச வேட்டி சட்டை வழங்கும் விழா.
இருக்க உறைவிடத்திற்கு
இலவச வீடு வழங்கும் திட்டம்.
சாகாம உயிரோடு இருந்து இதெல்லாம் அனுபவிக்க
கலைஞர் காப்பிட்டு திட்டம்.
இதுக்கு மேல இலவச கலர் டிவி.
அத்தியாவசிய  தேவைக்கு மேல்
அதிகமாகவே கெடைக்குது.
நாட்டுல இன்னும் எதுக்குடா சாமிய கும்புடுறீங்க?

சிறுவயதில் படித்திருக்கலாம்.
எனவே மறந்துவிடாது
உரக்க படியுங்கள் ஒருமுறை.
"மக்களை கொண்டு மக்களால் மக்களுக்காக நடத்தப்படுவது மக்களாட்சி".