இன்னும் எத்தனை நாள் தான்
உன் பேச்சில்
நான் உறைந்து போவதாயும்
உன் முத்தங்களில்
உயிர் கரைந்து போவதாயும்
உன் வெட்கங்கள்
என்னை கொள்ளை கொண்டதாகவும்
கற்பனையாய் எண்ணிக் கொண்டு
கவிதைகளை வெளி வரச் சொல்லி
கட்டாயப் படுத்துவது?
எங்கே இருக்கிறாய்?
உனக்காய் எழுதிய கவிதைகளை
காண்பிக்கப்பதற்க்காக என்னுடைய
கவிதை நோட்டின் தாள்கள்
காற்றில்
பட படத்து கொண்டிருக்கின்றன.
வார இறுதி நாட்களில்
கடற்கரைக்கு சென்று
உனக்கும் சேர்த்து
மணல் வீடு கட்டி வைத்து
காத்து கொண்டிருக்கிறேன்.
பேருந்து நிறுத்தங்களில்
திருவிழா கூட்டங்களில்
காபி விடுதிகளில்
இன்னும் இதர இடங்களில்
உன்னை தேடி கொண்டு இருக்கிறேன்
திசை காட்டி கருவி இல்லாது
சுற்றி கொண்டிருக்கும்
ஒரு மாலுமியாக.